காலி மாவட்டத்தின் கிந்தோட்டை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை நஷ்டயீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் பாரிய மற்றும் சிறியளவிலான சேதங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அவற்றின் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு கிராம சேவையாளர்களோ தொழில்நுட்ப உத்தியோகத்தர்களோ இதுவரை வருகை தரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தனர்.
கிந்தோட்டையில் வன்முறைகள் காரணமாக 81 வீடுகளும் 18 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன. மேலும் 6 முச்சக்கர வண்டிகளும் ஒரு லொறியும் வேன் ஒன்றும் 8 மோட்டார் சைக்கிள்களும் தாக்கியும் எரித்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் 8 திருட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிந்தோட்டை அசம்பாவிதங்களின் பின்னர் அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். அதேபோன்று ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.
எனினும் குறித்த வீடுகளுக்கு இதுவரை கிராம சேவையாளர்களோ அல்லது தொழில்நுட்ப உத்தியோகத்தர்களோ வருகை தந்து சேத விபரங்களை நேரில் கண்டறிந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக உடைக்கப்பட்ட வீடுகளை தொடர்ந்தும் அவ்வாறே பேண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக தாம் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் ரணமாக தாம் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் கிந்தோட்டை மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.