இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னை சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னை சிறைப்படுத்தப் போவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானைவை எனவும் தவறான தகவல்கள் பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவே அவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய அவரே நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள், மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தன்னை சிறைப்படுத்த முடியாது என உறுதியாக தெரிவித்தார்.
“நாட்டில் பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் நாளை எவ்வாறு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவது என்பதல்ல பிரச்சினை. இன்று நாடு காணப்படுகின்ற நிலைமையில் மக்களின் வறுமை, பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை என அனைத்தில் இருந்தும் எவ்வாறு மேலெழுவது என்பது குறித்த வேலைத்திட்டங்கள் அவசியம்.
இதற்கமையயே நாம் சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கின்றோம். இதற்கமைய எமது வேலைத்திட்டங்களை பெப்ரவரியில் வெளியிடுவோம். இதற்கமைய எம்முடன் இணைந்துகொள்ளுமாறு நாம் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். என்னை கைது செய்யப்வோவதாக வெளியாகும் கருத்து பொய்யானது.
என்னை சிறைப்படுத்தும் அளவிற்கு எவ்வித காரணங்களும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இல்லை. என்னை சிறைப்படுத்துவதற்கு எவ்வித சாட்சிகளோ, காரணங்களோ இல்லை.
இதேவேளை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே கூறினால், அவருக்கு தலையில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றே கருதவேண்டும்“
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]