எங்கள் தேசத்தில் செய்யப்பட்ட உயரிய தியாகங்களோடும் எங்கள் மக்கள் விடுகின்ற கண்ணீரோடும் விளையாடாதீர்கள் என்பதை புலம்பெயர் தேசத்தில் செயற்படும் சில அறமற்ற அமைப்புக்களை வலியுறுத்துகின்றேன்.
அப்படியான உங்கள் நகர்வுகளை எங்கள் மக்கள் இனம் கண்டுவிட்டார்கள். அதன் சலசலப்புக்கள் வெளிப்படுகின்றன. நீங்கள் அறமற்ற வகையில் நடக்கிறீர்கள், செயற்படுகிறீர்கள் என்பதைதான் மக்களின் வெளிப்பாடு உணர்த்துகின்றது.
கடந்த காலத்தில் எமது மக்களை அழித்து எங்கள் தேசமே குருதி வெள்ளத்தில் குளித்து அதனை வீரமாக காட்டி தேர்தலில் வென்ற ஶ்ரீலங்கா அதிபர் ஆட்சி அதிகாரத்தை விட்டு துரத்தியடித்ததை மறந்துவிடாதீர்கள்.
எங்கள் தேசத்தில் செய்யப்பட்ட உயரிய தியாகங்களோடும் எங்கள் மக்கள் விடுகின்ற கண்ணீரோடும் அவர் செய்த விளையாட்டின் எதிர்வினையாக சாபமாக அந்த விடயம் நடந்ததை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
அதேபோன்று இன்றும் எங்கள் உரிமை மறுக்கப்பட்டு எங்கள் இனம்மீது இனவழிப்பு தொடர்கின்ற நிலையில் மீண்டும் தவறுகளை இழைத்து எங்கள் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களை ஒடுக்க துணை நிற்காதீர்கள்.
அத்துடன் இவர்கள் தொடர்பில் புலம்பெயர் தேச மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். எங்கள் நிலத்தின் உரிமையும் விடுதலையும் நீதியும் புலம்பெயர் தேச மக்களின் கைகளிலும் உள்ளது என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து போராடுவோம்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை