கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வவுனியா நகரப்பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்துள்ளனர்.
இதனை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் நேரடியாக விஜயம் செய்து கண்காணித்துள்ளார்.
இதன்போது வவுனியா நீதிமன்றம் மற்றும் புகையிரத நிலைய வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 30 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.