உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும் போது, அவரின் உரை தமிழ் மொழியில் முறையாக உரைபெயர்க்கப்படவில்லை.
ஆகவே சரியான மொழிப்பெயர்ப்பை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (14) சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,
உள்ளூர் அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை தாங்கள் (சபாநாயகர்) சபைக்கு அறிவிக்கும் போது உங்களின் (சபாநாயகர்) வேகத்துக்கு அமைய தமிழ் மொழியில் சரியாக உரைபெயர்க்கப்படவில்லை.
உரைபெயர்ப்பு முறையாக அமையவில்லை நேற்று மாலை நடைபெறும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீர்ப்பின் தமிழ் வடிவத்தை சமரப்பிக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.
சபைக்கு தலைமைத் தாங்கிய சபாநாயகர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஆங்கில மொழியிலேயே கிடைக்கப் பெறும். அதை மொழிபெயர்க்க முடியாது என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சபாநாயகர், சபைக்கு அறிவித்த தீர்ப்பின் உள்ளடக்கத்தை, உரை பெயர்த்தவர் தமிழ் மொழியில் முறையாக உரை பெயர்க்கவில்லை.
தமிழ் உரைபெயர்ப்பு சரியாக அமையவில்லை. ஆகவே அதனை சரியாக மொழிபெயர்த்து தருமாறு கேட்கிறேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இதன்போது சபையில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் சபாநாயகரிடம் ‘ தமிழ் மொழி உரைபெயர்ப்பு முறையாக அமையவில்லை, ஆகவே தாங்கள் (சபாநாயகர்) விடுத்த நீதிமன்ற தீர்ப்பின் அறிவிப்பின் மொழிப்பெயர்ப்பை தமிழ் மொழியில் தருமாறு கேட்கிறார்’ என்று குறிப்பிட்டார்கள்.
சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், தங்களுக்கு (எஸ்.சிறிதரனை நோக்கி) சரியான மொழிப்பெயர்ப்பை வழங்குவதற்கு அறிவுறுத்துகிறேன்’ என்றார்