நாடு அழகாக உள்ள போதிலும் செயற்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக இலங்கை வந்த வெளிநாட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ரயில் நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக கோபமடைந்த மக்கள் நேற்று காலை கண்டி ரயில் நிலையத்தினுள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.
அத்துடன் ரயில்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு பாரிய நட்டம் ஏற்படுத்தியுள்ளனர். பதுளை மற்றும் கண்டி பகுதிகளுக்கு பயணித்த ரயில்கள் அனைத்தும் ரயில் நிலைய அதிபர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த மக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 500 பேர் வரையில் அங்கு ஒன்றுக்கூடியிருந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு கண்டி பொலிஸ் அதிகாரிகள் சிலர் தலையிட்டுள்ளனர்.
இந்த மக்களை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் அவர்களது இடங்களுக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, ரயிலில் மலையகத்தை பார்வையிட வந்த பெருந்தொகையான வெளிநாட்டவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை அழகான நாடாக இருந்தாலும் இவ்வாறு மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]