ஆப்கானிஸ்தானில், ராணுவ தலைமையகத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 11 வீரர்கள் கொல்லப் பட்டனர். ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காபூலில் உள்ள, ‘இன்டர்கான்ட்டினென்டல்’
ஓட்டலில், சமீபத்தில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 22 பேர் கொல்லப் பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன், காபூல் அருகே, போலீஸ் சோதனைச் சாவடியில், ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 103 பேர் கொல்லப்பட்டனர்; 235 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. இது தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ தலைமையக நுழைவாயிலில், ராணுவ வீரர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இவர்கள் மீது, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில், தற்கொலை படையைச் சேர்ந்த இருவர், தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.தற்கொலை படையினருடன் வந்த மேலும் சில பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகள் தரப்பில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஒருவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து, ஏராளமான வெடி பொருட்களும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.