ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு கொள்கை ரீதியில் தீர்வு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை தொழிற்சங்கத்தினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் வர்த்தகத்துறை அமைச்சருக்கும் இடையில் நேற்று வர்த்தகத்துறை அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
ஆசிரியர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் முரண்பாடான வகையில் அமைந்துள்ளது.
ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க தீர்மானித்துள்ளோம். ஏதிர்வரும் திங்கட்கிழமை இப்பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.