அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதி பல கூட்டங்களில் தமிழ் தலைவர்கள் தன்னோடு எந்த விடயத்திலும் கலந்துரையாடுவதில்லை. அதனால் தற்போது பேருந்து சென்று விட்டது.
அரசியல் நாடகம்
இனி யாருடைய தயவும் தேவையில்லை அந்த பேருந்து ஓடும் என்று கூறியிருக்கின்றார். இந்த நேரத்தில் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.

ஜேவிபி இந்த CIRD8நாடாளுமன்றத்திலே அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளாது. அந்த நேரத்திலே ஓடுகின்ற பேருந்தை நிறுத்தி ஆளுமையுள்ளவர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். அவ்வாறு தான் அவர் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.
தற்போது ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று கூறி இருக்கின்றார். இதிலிருந்து அவர் தமிழ் மக்களுடைய வாக்குகளை கபலீகரம் செய்வதற்கான அரசியல் நாடகமொன்றை நடத்துகின்றார் என்பது தெரிகிறது.
தமிழ் மக்களின் வாக்குகள்
ஜனாதிபதியை பொறுத்தவரைக்கும் பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது.

ஆனால் இவரும் கடந்த ஜனாதிபதிகள் போன்று அரசியலுக்காக கருத்துக்களை கூறுவதாக தான் இருக்கின்றது. இதனூடாக தெரிய வருவதானது, கடந்த ஜனாதிபதிகள் போன்றே இவரும் செயற்படுவார் என்பது தான் தெட்டத் தெளிவாகின்றது.
ஆகவே மக்கள் இவருடைய பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறக்கூடாது. ஜனாதிபதி நினைத்தால் தற்போதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும். இந்த தேர்தல் முடிந்ததன் பின்னர் தான் விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற தேவை இல்லை.
ஆகவே அரசியல் கைதிகள் விடயத்தில் அவர் தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்கான அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்பதை வெளிப்படை.” என குறிப்பிட்டுள்ளார்.