அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் வட மாகாணம் முழுவதும் நாளைமறுதினம் பூரண ஹர்தால் மற்றும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.வடபகுதியிலுள்ள பல பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாளைமறுதினம் காலை 09:30 க்கு நடத்தப்படவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை , யாழ்ப்பாணபல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ,இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம்,யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்ர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன இணைந்து இந்த அழைப்பை விடுத்துள்ளன.
தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் அரசுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.