கொழும்பில் உள்ள அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளை விற்பதற்கும், குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு விடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு எதிராக இதுவரை நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதுடன் இந்த வார இறுதியிலும் பல வழக்குகள் பல்வேறு தரப்பினர் ஊடாக தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.
தேசிய வளங்களை அந்திய தரப்பினரிடமிருந்து பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதங்களை துறந்து ஒன்றிணைய வேண்டும். இலங்கை வாழ் மக்கள் இன ரீதியாக பிளவுப்பட்டிருந்தால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. முரண்பாடுகளை பிற தரப்பினரே சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடினார்கள். அவ்வேளை இனம், மதம், மொழி வேறுப்பாடுகள் காணப்படவில்லை. நாட்டு மீதான பற்று மாத்திரமே விடுதலை வேட்கைக்கான அனைத்து இனங்கள் மத்தியிலும் காணப்பட்டது.
1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள போராடியதைப் போன்று இன்று அனைவரும் மீண்டுமொரு தடவை இனம் ,மதம் பேதமின்றி ஒன்றிணைந்து , எமது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்வதேச சக்தியிலிருந்து தாய் நாட்டை பாதுகாக்க போராட வேண்டும்.
இதற்காக சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்திருந்தது. இலங்கை மக்கள் மத்தியில் காணப்படும் இன பிளவு நாட்டை பாரிய வீழ்ச்சிக்கு கொண்டு செல்லுமே தவிர நாட்டை ஒருபோதும் முன்னேற்றாது.
இது எமது பூமி முழு நாடும் எமது நாடு எவ்வாறு நாகவிகாரை எமக்குச் சொந்தமென நாம் கூறுகிறோமோ அதேப்போல் தெவுந்திரமுனை எமக்கு சொந்தமென வடக்கிலுள்ளவர்களும் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். எனவே எமக்கு தற்போது இருக்கும் சர்வதேச அழுத்திலிருந்து நாம் விடுபட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தலைநகரில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகள் அந்நிய நாட்டவர்களுக்கு விற்கவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் இதுவரையில் இரண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இவ்வார இறுதியில் பல்வேறு தரப்பினர் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம். என்றார்.