கோலாகலமாக நடந்த ஒலிம்பிக் தொடக்க விழா!
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டு 31-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் நேற்று நடந்தது.
இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஸர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில், கொடி ஏற்றத்துக்கு பின்னர், பிரேசில் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரரான குஸ்ட்டாவோ குவெர்ட்டென் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி மரக்கானா திடலை சுற்றி வந்தார்.
இறுதியாக, பிரேசில் நாட்டின் பிரபல மாரத்தான் வீரரான வான்டர்லியி டெ லிமா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
28 வகையான விளையாட்டுகளில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல இவர்கள் மல்லுக்கட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.
இந்த 31-வது ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், தாய்நாட்டை கடந்து வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்பவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.