முன்னாள் போராளிகளின் மர்மமான இறப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியாவில் No 10, Downing Street, London SW1A 2AA எனும் இடத்தில் 24.07.2016 மதியம் 12:00 மணி முதல் மாலை 04:00 வரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எமக்காக போராடியவர்கள் அண்மைக்காலமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் மரணத்தை தழுவி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் இடுப்புக்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் உள்ளனர். இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
“2009 ம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 104 போராளிகளது சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.”
“முன்னாள் போராளிகளாய் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் உடல் நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”
ஆகிய அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்போது நூற்றுக்குமதிகமானோர் கலந்து கொண்டு எங்கள் உறவுகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்தனர்.