ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். நீலப்பட நடிகை சன்னி லியோனை நட்சத்திரமாக்கியது, பல காதல் திருமணங்களை நடத்தி வைத்தது, மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு மீண்டும் மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது, அறிமுகமில்லாதர்களை திடீரென பிரபலமாக்கியது என பிக்பாஸ் நிகழ்ச்சியின் சாதனைகள் ஏராளம்.
இந்தியிலிருந்து தென்னிந்திய மொழிகளுக்கு வந்தது பிக் பாஸ். தமிழிலும், தெலுங்கிலும் இப்போது 3வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. கன்னடத்தில் 6 சீசன் முடிந்து இப்போது 7வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மலையாளத்தில் முதல் சீசனோடு நின்று விட்டது. இன்னும் 2வது சீசனே தொடங்க முடியாத நிலை.
இதற்கு காரணம் கேரள மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதரிக்கவில்லை. “அறிமுகமில்லாதவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மற்றவர்களை அறிந்த கொள்ள வைக்கிற கான்செப்ட்டை கேரள மக்கள் ஏற்கவில்லை. தங்கள் கலாச்சாரத்திற்கு விரோதமானதாக அவர்கள் அதை பார்க்கிறார்கள்.
இந்த நிலைமை புரிந்துதான் நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் கேரள மக்களின் அபிமானத்திற்குரிய மோகன்லாலை பிக் பாஸாக ஆக்கினார்கள். அப்படி இருந்தும் அந்த நிகழ்ச்சி வருமான ரீதியாக வெற்றி பெறவில்லை” என்கிறர் கேரள தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர்.
என்றாலும் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான என்டமோல்சைன் நிறுவனம் 2வது சீசனை துவங்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஜனவரி மாதம் 2வது சீசன் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.