மலையாள திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் கவனம் செலுத்தி வரும் இவர் ‘மாரி-2’ படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் இவருக்கு சிறந்த மலையாள நடிகராக ரெட் எப்எம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மோகன்லால் முன்னிலையில் பிரித்விராஜ் கையால் பெற்றது தனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘நான் படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது, ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் ‘தி செவன்த் டே’ மற்றும் ‘என்னு நிண்டே மொய்தீன்’ ஆகிய படங்களில் எனக்கு முக்கியத்துவமான கதாபாத்திரத்தை கொடுக்கச் செய்து என்னை ரசிகர்களிடம் கொண்டு சென்றவர் பிரித்விராஜ் தான். தற்போது தான் இயக்கிய லூசிபர் படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து தொடர்ந்து என் மீது அக்கறை காட்டி வருகிறார்.. அதனாலேயே அவர் கையால் இந்த விருதை வாங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.