கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கிவிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே பல செய்திகள் வெளிவந்துள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் படம் பற்றி பல்வேறு தகவல்கள் அடிக்கடி வருவது வழக்கமாக இருக்கிறது.
சமீபத்திய தகவலாக இந்தப் படத்திற்கான பட்ஜெட் ரூ.1000 கோடி என்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகையை தங்களால் சமாளிக்க முடியாது என்றுதான் லைக்கா நிறுவனம் பின்வாங்கியதாகவும் தெரிவிக்கிறார்கள். அதனால்தான் மணிரத்னம் இரண்டு மூன்று தயாரிப்பு நிறுவனங்களை ஒன்றிணைத்து படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறாராம்.
இரண்டு பாகங்களில் தயாராக உள்ள இந்தப் படம் மணிரத்னத்தின் லட்சியப் படைப்பு என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமாம். ஹிந்தி நடிகர்களும் படத்தில் இடம் பெற்று ஹிந்தியிலும் எடுத்தால் உலக அளவில் வியாபாரம் செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்று அவர் கருதுகிறாராம். தமிழ், ஹிந்தியில் நேரடியாகப் படமாக்கி மற்ற மொழிகளில் டப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.