காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது.
இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.
பின்னர் கடந்த 19-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.
அதன் படி இன்று கூடிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன்,திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வாசன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன், சரத்குமார், கருணாஸ்,செ.கு.தமிழரசன், வேல்முருகன், கிருஷ்ணசாமி,
கதிரவன், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், புதிய நீதிக்கட்சி ரவிக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.