விஜய் நடித்த தெறி படத்தை இயக்கிய பிறகு மீண்டும் விஜய்யை இயக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்த அட்லி, மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். மிகப்பெரிய வசூலை குவித்த அந்த படத்திற்கு பிறகும் அவர், விஜய்யை இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனபோதும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது சாஹோ படத்தில் நடித்து வரும் பிரபாஸை வைத்து 2018ல் அட்லீ ஒரு படம் இயக்குவார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. மெர்சல் படத்திற்கு முன்பே பிரபாஸை, அட்லி சந்தித்ததாகவும், அந்த நேரத்தில் அவர் பாகுபலி-2வில் பிசியாக இருந்ததால் இணைந்து படம் பண்ணுவது குறித்து அப்போது அவர்கள் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.
மெர்சல் படத்தின் கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய நிலையில், அடுத்தபடியாக அட்லி இயக்கும் படத்திற்கும் அவர் தான் கதை எழுதுவதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் பிரபாஸ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.