தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் நேற்று(19) ஆரம்பிக்கப்பட்டது.
மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, ஆரம்பமான இந்த அரசவைக் கூட்டத் தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரில் இடம்பெற்று வருகின்ற இந்த அமர்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும்,நேரடியாக பங்கெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தியாகு, பேராசிரியர் சரஸ்வதி உட்பட பல வள அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.
இதேவேளை தமிழர் தாயகத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் பல அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த அமர்வின் முதல் அரங்கில் இலங்கையின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா? என்ற கருப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இரு பேசுபொருள்கள் அமர்வின் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பல்பரிமாண ஒழுங்காக மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கு ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு சாதகமான வாய்ப்புகளைத் தருமா என்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
தமிழ் மக்களை உலகஅரங்கில் ஒரு வலுமையமாக உருவாக்குவது குறித்த சிந்தனையும் உரையாடலும் இவ் அமர்வில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.