நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய பொலிஸ்மா திணைக்களம் நடவடிக்கை!
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை முதலீட்டு மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனை தடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட அரசியல்வாதிகளை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபர் ஆணையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, டீ.வீ.சானக தென் மாகாண சபை உறுப்பினர் எஸ்.வீ.பீ.ஆனந்த, ஹம்பாந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனுர சமர குணரத்ன உட்பட 26 பேருக்கு இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முக்கிய சில இடங்களில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த நீதிமன்ற உத்தரவை மீறி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் செயற்பட்ட அரசியல்வாதிகளை இவ்வாறு கைது செய்து விசாரணை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.