இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் ஒரு இலட்சம் யூரோ பரிசு
ஜேர்மனின் பேர்லின் நகர கிறிஸ்மஸ் சந்தையில் பாரவூர்தியால் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உருவப் படத்தை, அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்த பயன்படுத்திய பாரவூர்தியின் சாரதி இருக்கைக்கு கீழ் இருந்த அடையாள அட்டையில் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பவரே, இத்தாக்குதலுடன் தொடர்படையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர் துனீசிய பிரஜை என குறித்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
24 வயதுடைய ‘அனிஸ் அம்ரி’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த நபர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு, ஒரு இலட்சம் யூரோக்கும் மேற்பட்ட பணம் பரிசாக வழங்கப்படும் என ஜேர்மனின் கூட்டாட்சி சட்டத்தரணி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அம்ரியின் தந்தை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துனீசியாவை விட்டு சட்டவிரோத குடியேற்றவாசியாக பயணித்ததாகவும், இத்தாலிய சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்ததாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள போதிலும், தீவிரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதல் இது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்ற அம்ரியை வலைவீசித் தேடிவரும் பொலிஸார், பேர்லின் நகரைச் சுற்றி ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/76814.html#sthash.wPI4RGzf.dpuf