பிணையில் சென்றார் கருணா! விசேட பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவரை பத்து இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 50 இலட்சம் ரூபா வீதம் 5 சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் நிதி மோசடிகள் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை விநாயகமூர்த்தி முரளிதரனுக்க வழங்குமாறும் நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.
பிரதி அமைச்சராக பதவிவகித்த காலத்தில் அரச வாகனத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக கருணா நவம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருணாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கி அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நீதிமன்றம் இன்றுதான் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது – கருணா புகழாரம்
இலங்கை நீதிமன்றம் இன்றுதான் அதனுடைய தீர்ப்பை சரிவர செய்துள்ளது, இன்றுதான் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நீதிமன்றின் தீர்ப்பிற்குப் பிறகு வெளியில் வந்த கருணா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு பிணை வழங்கி நான் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றம் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே எனக்கு குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியிருந்தார். இது குறித்து முன்னதாகவே எழுத்து மூலம் நான் அறிவித்திருந்தேன்.
ஆனால் அப்போது அதை கணக்கில் எடுக்காத இவர்கள், இன்று இது ஒரு பெரிய பிழை என என்னை கைது செய்தார்கள். ஆனால் நீதிமன்றம் என்னை நிரபராதி என்பதை கூறாமல் கூறியுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், இவருக்கு பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை வழங்குமாறும் நீதமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.