ஆசியக்கிண்ண டி20 தொடரில் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
மகளிர் ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்றது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி மிதாலி ராஜ், மந்தானா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.
மிதாலி ராஜ் சிறப்பாக ஆட, மறுமுனையில் மந்தானா 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த மேகனா (9), வேத கிருஷ்ண மூர்த்தி (2), ஹர்மன் ப்ரீத் கவுர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக செயல்பட்ட மிதாலி ராஜ் அரைசதம் கடந்தார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி ராஜ் 65 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் பின்னர் 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது.
தொடக்க வீராங்கனைகள் ஆயிஷா 15 ஓட்டங்களிலும், ஜவேரியா 22 ஓட்டங்களிலும் ஆட்டமிந்தனர்.
அதன்பின் வந்த அஷ்மாவியா இக்பால் (1), நயின் அபிதி (9), ஐரம் ஜாவேத் (3) சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனார்கள்.
பாகிஸ்தான் அணியின் தலைவி பிஸ்மா மரூப் 26 பந்தில் 25 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய நிடா டார், சானா மிர் ஆகியோர் தலா 12 ஓட்டங்கள் எடுக்க, பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த தொடர் முழுவதும் அசத்திய இந்திய அணி தொடரில் ஒரு தோல்வி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.