முல்லைத்தீவில் பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் பாடசாலையொன்றுக்கு நேற்றையதினம் அதே பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அதனை சக மூன்று மாணவிகளும் அருந்தியுள்ளனர். தண்ணீரை குடித்த மாணவிகள் வாந்தி எடுத்துள்ளனர்.
அதனையடுத்து, குறித்த விடயம் ஆசிரியர் ஒருவருக்கு தெரியப்படுத்தபட்டதனையடுத்து குறித்த மாணவியின் தண்ணீர் போத்தலை சோதனை செய்து பார்த்தபோது போதைபொருள் வாசனை வீசியுள்ளது. அதனையடுத்து குறித்த மாணவியை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வீட்டுக்கு சென்று தந்தையிடம் முறையிட்டதனை தொடர்ந்து பாடசாலைக்கு விரைந்த தந்தை குறித்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான ஆசிரியரும் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.