இலங்கையில் 77ஆவது சுதந்திர தினம் வடக்கு, கிழக்கில் கரிநாளாக பிரகடனம் செய்யப்பட்டு இன்றைய தினம் (4) அனுஷ்டிக்கப்பட்டதோடு பாரிய கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம்
முதலில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடி கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழ மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முற்பகல் 11 மணியளவில் போராட்டத்தினை ஆரம்பித்த மாணவர்கள், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்து, இலங்கையை குற்றவியல் கூண்டில் நிறுத்து, இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே, ஓலம் நிறைந்த தமிழர் வாழ்வுக்கு எப்போது விடிவு, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பினார்கள்.
போராட்டத்தின் இறுதியில் ‘எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்’ என்ற தலைப்பிலான பிரகடனத்தையும் வெளியிட்டனர்.
நல்லூரில் போராட்டம்
இதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட இளையோர் பங்கேற்றிருந்தனர்.
கிளிநொச்சியில் நீதி கோரிய போராட்டம்
வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.
இந்தப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும், இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? உட்பட பல கோசங்களை எழுப்பினர்.
மட்டக்களப்பு – செங்கலடியில் போராட்டம்
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்து, அங்கு போராட்டம் தொடர்ந்தது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
அவர்கள், ‘இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்’, ‘நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா’, ‘உங்களுக்கு சுதந்திர நாள் எங்களுக்கு திண்டாட்ட நாள’, ‘காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?’, ‘எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும்’, ‘நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு?’, ‘சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?’, ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஈடுபட்டனர்.
இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை வட,கிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு நகரில் முன்னதாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டம் செங்கலடியில் முன்னெடுக்கப்பட்டதோடு, போராட்டத்தின் இறுதியில் சர்வதேச சமூகத்துக்கு அனுப்புவதற்கான மகஜரொன்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி செல்வராணியினால் வாசிக்கப்பட்டது.