: குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரைச் சேர்ந்தவர். கருப்பணன் ராமுவின் உறவினர்கள் மூலம் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, குவைத் தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கிருக்கும் தமிழ் சங்கம் மூலம் தமிழர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். எனினும், தமிழர்கள் இறப்பு குறித்து தூதரகம் மூலம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அந்தக் கட்டிடத்தில் பணிபுரிந்த கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை, பேராவூரணியைச் சேர்ந்த புனாப் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நிலை குறித்து தெரியாததால் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது தீ விபத்து தொடர்பாக அயலக தமிழர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.
முன்னதாக, குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.