ஐஸ் கிரீம் விற்கும் முதியவருக்கு கிடைத்த 3 கோடி ரூபாய்: நெகிழ வைக்கும் சம்பவம்
அமெரிக்க நாட்டில் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் முதியவருக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் ரூ.3 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிகாகோ நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் Fidencio Sanchez என்ற 89 வயதான முதியவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
பணி செய்த காலத்தில் இவருக்கு கட்டாய ஓய்வு வழங்கியதால், கடந்த 23 ஆண்டுகளாக சிறிய தள்ளுவண்டியில் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் வயது முதிர்ச்சியின் காரணமாக அவரால் வண்டியை தள்ளி பிழைப்பு நடத்த முடியவில்லை.
இந்நிலையில், கடந்த யூலை மாதம் இவரது ஒரே மகள் உடல்நிலைக்காரணமாக மரணமடைந்துள்ளார். மகளின் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு முதியவரை சேர்ந்துள்ளது.
அதே சமயம், இவரது மனைவிக்கும் பணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டதால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் திணறியுள்ளார்.
வேறு வழி இல்லாத காரணத்தினால் தனது தள்ளுவண்டியை தயார் செய்த அவர் தற்போது ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் மீண்டும் இறங்கியுள்ளார்.
ஒரு நாள் இந்த முதியவர் சாலையில் வண்டியை தள்ள முடியாமல் போராடி நடந்துச் சென்றதை முகம் தெரியாத நபர் ஒருவர் பார்த்துள்ளார்.
பின்னர், முதியவரின் கதையை கேட்ட அவர் முதியவருக்கு நிச்சயம் உதவ வேண்டும் என தீர்மானித்து அவரை புகைப்படம் எடுத்து பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கும் GoFundMe என்ற இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், இதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘89 வயதிலும் தனது குடும்பத்திற்காக ஒரு நாளில் 12 மணி நேரம் உழைக்கும் இந்த முதியவருக்கு குறைந்தது 3,000 டொலர்களாவது திரட்டி அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்ட இந்த வேண்டுகோள் லட்சக்கணக்கானவர்களை சேர்ந்துள்ளது.
இது மட்டுமில்லாமல், இதுவரை 20,10,000 டொலர்(2,92,09,320 இலங்கை ரூபாய்) சேர்ந்துள்ளது.
முதியவரின் முயற்சியை பாராட்டிய சமூக வலைத்தளவாசிகள் ‘இனிமேலும் போராடாமல் இந்த தொகையை வைத்து ஓய்வு காலத்தை நிம்மதியாக கழியுங்கள்’ என வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றனர்.