ஜீ-20 உச்சிமாநாட்டை ஒட்டி HANGZHOU இல் பலத்த பாதுகாப்பு
இன்னும் சில நாட்களில் சீனாவின் Hangzhou நகரில் ஜீ-20 உச்சிமாநாடு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) அங்குள்ள பல வீதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல் முறையாக சீனாவில் இடம்பெறும் ஜீ-20 உச்சிமாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜேர்மன் அதிபர் ஏஞ்செலா மேர்கல் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளும் சீனா செல்லவுள்ளனர்.
இம்மாநாடு முதல் முறையாக தமது நாட்டில் இடம்பெறுவதனால், சீனா அதற்காக பல விஷேட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அதன்படி குறிப்பாக பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, அதிகமான பொலிஸ் அதிகாரிகள் Hangzhou நகரின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இந்த உச்சிமாநாடு காரணமாக சீனாவின் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள அதிகமான முதிய மக்களுக்கு ஆங்கிலக் கல்வியும் கற்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உச்சிமாநாட்டை மிகவும் சிறந்த முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.