சலாவ இராணுவ முகாமிற்கு அருகில் மீண்டும் வெடிப்பு?
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கு அண்மையில் வெடித்து சிதறியதன் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் குறித்த இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டு தோட்டத்தில் மேலும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டு தோட்டத்தை துப்பரவு செய்துக் கொண்டிருக்கும் போது நிலத்துக்கு கீழ் புதைந்து கிடந்த வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குண்டு ஒன்றின் மேல் பகுதியே இவ்வாறு வெடித்துள்ளதாகவும், வெடிப்பு சத்தம் தூர பகுதிக்கு கேட்டுள்ள போதிலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலைமையில் வீட்டு தோட்டத்தில் நடமாடும் போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்திலே இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கில் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டதுடன் பல வீடுகள் சேதமடைந்திருந்தன.
குறித்த ஆயுத கிடங்கிலிருந்து பல கனரக ஆயுதங்கள் அந்தப் பிரதேசத்தின் பல பகுதிகளில் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
சாலாவ முகாம் வெடிப்பினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி
அவிசாவளை சாலாவ இராணுவ ஆயுத முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அதன் அருகில் காணப்பட்ட இடிபாடுகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவர் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக சாலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையத்தில் உள்ள இடிபாடுகளை 68 வயதுடைய அதன் உரிமையாளர் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதன்போது சுவர்கள் இவர் மீது திடீரென வீழ்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய நபரை மீட்ட பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு அனுமதித்த போதிலும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் கடந்த ஜுன் மாதம் திடீர் வெடிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அதனை அண்மித்த 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதடைந்ததோடு, தற்போது அவற்றை புனர்நிர்மானிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.