தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 114ஆவது அமர்வு நேற்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கடந்த 11ஆவது அமர்வின்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, நேற்றுமுன்தினமும் நேற்றும் அமைச்சுகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாணத்திற்கு, எதிர்வரும் நிதியாண்டுக்காக 26 ஆயிரத்து 754 மில்லியன் ரூபா நிதி முன்மொழியப்பட்டது.
அதன் பின்னர் உள்ளூராட்சி, கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, போக்குவரத்து, கூட்டுறவு மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள்விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டை நேற்று மாலை முன்மொழிய, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார்.
அதனையடுத்து, வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை சபை ஏகமனதாக அங்கீகரிப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வை ஜனவரி மாதம் 9ஆம் திகதி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு, அன்றுவரை சபை அமர்வுகளை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.