மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். இவர் நடிப்பில் இன்று தமிழில் மாரி 2 மற்றும் மலையாளத்தில் இந்த எண்டே உம்மாண்டே பேரு என இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாகத் தான் டொவினோ தாமஸ், ஒரு இளம் ஹீரோவாக மலையாள சினிமாவில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால், எண்டே உம்மாண்டே பேரு படத்தின் கதையை நான்கு வருடங்களுக்கு முன் தயார் செய்துவிட்ட இயக்குனர் ஜோசப், செபாஸ்டின் இந்த படத்தில் வரும் அம்மா கேரக்டரில் ஊர்வசி தான் நடிக்க வேண்டும் என அப்போதே ஊர்வசியிடம் கூறி சம்மதமும் வாங்கி விட்டாராம். ஆனால் இந்த கதைக்கான கதாநாயகன் கிடைக்க அவருக்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாம்.
ஊர்வசியே இந்த படத்தை பற்றி மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அவருக்கு நினைவூட்டி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஜோசப் செபாஸ்டின். அம்மா மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள குடும்பப்பாங்கான இந்த படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார் ஊர்வசி.