ஹம்பாந்தோட்டையில் பதற்றம்! பெருமளவு கடற்படையினர் குவிப்பு! பலர் மீது தாக்குதல்
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் துறைமுகத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பெருமளவு கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குழுவினர் கடலுக்கு நடுவிலும், இன்னொரு குழுவினர் 14 மாடியிலான கட்டடங்களிலும், மேலுமொரு குழுவினர் துறைமுகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களை இலங்கை துறைமுக அதிகாரசபையில் நிந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர், முயற்சித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் ஜப்பானுக்கு சொந்தமான பாரிய கப்பல் ஆர்ப்பாட்டக்காரர்களினால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் கார்களை ஏற்றியுள்ள கப்பல் ஐரோப்பாவை நோக்கி செல்ல வேண்டிய நிலையில், அதன் பயணம் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கப்பலை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Hyperion Highway என்ற இந்த ஜப்பானிய கொள்கலன் கப்பலில், 7000 கார்கள் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் உட்பட பலர் மீது தாக்குதல்
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற துறைமுக ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 6 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.