இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
சவுதம்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் சதத்தால் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் குவித்தது.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 79 பந்துகளில் 3 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்தார்.
இது இவருக்கு இரண்டாவது சதம். பட்லர் 65 ஓட்டங்களும், அணித்தலைவர் மோர்கன் 45 ஓட்டங்களும் குவித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 2, பிரிடோரியஸ் 1, அறிமுக வீரர் மகாராஜ் 1, பெலுக்வாயா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
331 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாடியது.
கடைசி ஓவரில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வுட் பந்து வீச்சில் 4 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது தென் ஆப்பிரிக்கா.
அதிகபட்சமாக, கியூ டி காக் 98 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பிளங்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் அடங்கிய இத்தொடரை இங்கிலாந்து 2-0 என வென்றது.