விண்ணில் பாயும் ராக்கெட்! பள்ளி மாணவனின் சாதனை
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
இதில் கலந்து கொண்ட 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் தியான் அர்ஷத், நீர் மற்றும் காற்றழுத்தம் மூலம் இயங்கக்கூடிய ராக்கெட் போன்ற பொருளை தயாரித்து சாதனை படைத்தார்.
அதாவது, தண்ணீர், காற்று ஆகியவற்றின் இழுவிசை மூலம் விண்ணில் பாயும் விதத்திலான ராக்கெட் போன்ற பொருளை வடிவமைத்துள்ளார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் பாதியளவிற்கு தண்ணீர் நிரப்பிய பின் அதனை மூடிவிட்டு காற்று வெளியேறாதவாறு சைக்கிள்மவுத் வால்டியூப் பொருத்தி எம்.சீல் எனப்படும் பசையினால் இறுக்கமாக ஒட்டப்பட்டுள்ளது.
வால்டியூப் மூலம் பாட்டிலில் மீதமுள்ள வெற்றிடத்தில் அதிக அழுத்தம் கொண்ட காற்றை நிரப்பி, அதன் பக்கவாட்டில் சிறிய குழாய் இணைக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் கீழிருந்து மேலாக 35 மீற்றர் நீளமுள்ள கட்டுக்கம்பி கட்டப்பட்டு, அதில் தண்ணீர், காற்று நிரப்பப்பட்ட பாட்டிலை பொருத்தி அதன் வால்வினை திறந்தவுடன், காற்றின் இழுவிசையால் பாட்டில் மேல்நோக்கி மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் சென்றடைந்தது.
இதுகுறித்து அர்ஷத் கூறுகையில், நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் கீழ், ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்திசையில் செயல்படும் எதிர் வினை உண்டு.
கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்தும் ராக்கெட்டை உயரே செலுத்த முடியவில்லை. இம்முறை நடந்த அறிவியல் கண்காட்சியில் இயற்பியல் ஆசிரியர் சாம் ராஜேஷ் உதவியுடன், பல்வேறு கட்ட சோதனைக்கு பின்வெற்றிகரமாக ராக்கெட் சென்றது என்று தெரிவித்துள்ளார்.