விட்டோரி மீது திடீர் முறைப்பாடு – மீண்டும் பந்து வீச தடைவிதிக்கப்படுமா?
ஜிம்பாப்வே அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரி ICC விதிமுறையை மீறி பந்துவீசியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் போது இலங்கைக்கு எதிரான போட்டியிலே இவ்வாறு பிரைன் விட்டோரி விதியை மீறி பந்தை வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதாவது பிரைன் விட்டோரி விதிமுறையை மீறி 15 பாகைக்கும் அதிகமாக கையை மடித்து பந்தை வீசுவதாக போட்டி அதிகாரிகள் ஜிம்பாப்வே கிரிக்கெட் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த அண்டு ஆரம்பத்தில் இதே பிரச்சினை காரணமாக விட்டோரி பந்து வீச தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் ஜனவரியில் பங்களதேஷ் அணிக்கெதிரான டி20 போட்டியில் ஐ.சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவது கண்டறியப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் இவருக்கு பந்து வீச தடைவிதிக்கப்பட்டது.
பின்னர், விட்டோரி பந்துவீச்சு பாணியை மாற்றிக்கொண்டதை தொடர்ந்து ICC அவருக்கு மீண்டும் அனுமதியளித்தது.
இதன்படியே இவர் கடந்த முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் பந்துவீசினார்.
எனினும் இவர் மீண்டும் விதிமுறையை மீறி பந்துவீசுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது, மீண்டும் விட்டோரி மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரது பந்துவீச்சினை ஆராய்வதுடன், குறித்த அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ICC அறிவித்துள்ளது.
அத்தோடு இலங்கை – சிம்பாப்வே மோதிய முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் விட்டோரி 52 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.