தேசிய தலைவர் பிரபாகரன் தமது போராளிகள் யாரும் வளர்வதை விரும்பமாட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கருணா அம்மான் (Karuna Amman) என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்தற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போராளிகள்
இந்த காலப் பகுதியிலேயே முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிரிந்தமையானது, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சி காரணமாக இடம்பெற்ற ஒரு செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் பேச ஆரம்பித்திருந்தனர்.

சூழ்ச்சி என்று கூறுவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்று முழுதாக தவறான விடயம். உண்மையிலேயே எங்களுடைய தளபதிகளும், போராளிகளும் நீண்டகாலமாக வெறுப்படைந்திருந்தார்கள்.
வடக்கை பொறுத்தவரையில் தலைவருக்கு நெருக்கடி வருகின்ற பொழுதெல்லாம், எங்களது அணி தான் அவரை காப்பாற்றியது. மணலாறு சண்டையாக இருக்கலாம். மட்டக்களப்பு போராளிகள்தான் அவரை காப்பாற்றினார்கள்.
அதேபோன்று தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களை கூட நாங்கள் தான் தெரிவு செய்து அனுப்புவோம். அந்தளவிற்கு காப்பாற்றினோம்.
அரசுக்கு சமமான கட்டமைப்பு
அதன் பிறகு போராட்ட கட்டமைப்பு, அதை பொறுத்தவரை 25க்கும் அதிகமான போராட்ட கட்டமைப்புக்கள் இருந்தாலும் அதில் ஒரு கட்டமைப்பில் கூட கிழக்கு மாகாண போராளிகள் வரவே இல்லை.

கடற்புலியாக இருக்கலாம். புலனாய்வு துறையாக இருக்கலாம். அரசியல் துறையாக இருக்கலாம். அந்த துறைகளில் கிழக்கு மாகாண போராளிகளை காண முடியாது.
அது அவர்கள் திட்டமிட்டு செய்தார்களா? அல்லது மனம் இடம் கொடுக்காமல் தானாக வளர்ந்ததா? என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை.
இருந்தாலும், தலைவரிடம் நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். இந்த சமநிலையை பேணாவிட்டால், பிற்காலத்தில் பிரச்சினை வர வாய்ப்பிருக்கின்றது என கூறினேன்.
விடுதலைப் புலி கட்டமைப்பு என்பது அரசுக்கு சமமான கட்டமைப்பாக இருந்தது. கருணா அம்மானை தவிர வேறு எவருமே மேல் பதவியில் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.