யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் இன்று பி.ப 4.00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.
முதல் நிகழ்வாக செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவரான இராசேந்திரன் மகிழ்வதனி அவர்களின் சகோதரி இராசேந்திரன் காந்தரூபி அவர்கள் நிகழ்வின் பிரதான சுடரை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.J. ஜெயரட்ணம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் நினைவுச் சுடரை ஏற்றினார்கள்.
தொடர்ந்து மதத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பொது மக்கள் அனைவரும் நினைவுச் சுடர்களை ஏந்தி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட 61 சிறுமிகளையும் நினைவு கூரும் முகமாக, அவர்களை சித்தரிக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டு, தீப்பந்தம் ஏந்தியும், மலர் தூவியும் உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உறவுகள் வேதனைகளை தாங்காது கண்ணீர் விட்டழுதனர்.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.T. ஜெயரட்ணம், மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்) உள்ளிட்டவர்களின் உரைகளுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவுபெற்றது.