மும்பை இந்தியன்ஸை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
அதன்படி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரகானே, திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கமே புனே அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் திரிபாதி டக்அவுட் ஆனார்.
2-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்மித் 1 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தனர். இதனால் 9 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து புனே தத்தளித்தது.
3-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரகானே 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து திவாரியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.
டோனி முதலில் நிதானமாக விளையாடினார். அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அதிரடி காட்ட, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் – பார்த்திவ் படேல் முதலில் அதிரடி காட்டினர். இந்த ஜோடி 35 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரின் போது தாகூர் வீசிய ஓவரில் அவரிடமே ரன் அவுட்டாகி வெளியேறினார் சிம்மன்ஸ்( 5).
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா (1) , ராயுடு (0), பொல்லார்டு (7) ஆகிய மூன்று முக்கிய வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த அணியின் போக்கே மாறியது. அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா 14 ஓட்டங்களும், குரூனல் பாண்டியா 15 ஓட்டங்க்களும் எடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திய பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ஓட்டங்களை சேர்த்திருந்த போது தாகூர் பந்தில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து புனே அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை கொல்கத்தா – ஐதராபாத் இடையே எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 19-ஆம் திகதி மும்பையுடன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 21-ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் புனேவை சந்திக்கும்.