தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், ‘சிக்னல்’ கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் செல்போன் மூலம் மற்றவர்களிடம் பேச முடியாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
செல்போன் மூலம் முக்கிய தகவல்கள், அவசர செய்திகள் பரிமாறப்படும் சூழ்நிலையில், ‘ஏர்செல்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
எனவே சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள ஏர்செல் மையங்களுக்கு பொதுமக்கள் சென்று முறையிட்டனர். எனினும் முறையான விளக்கம் கிடைக்காததால் ஊழியர்களுடன் வாக்குவாதமும் நடந்தது.
2-வது நாளாக முடங்கிய ஏர்செல் நிறுவன சேவை அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் ஏர்செல் வேலை செய்யாததால் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மூடப்பட்டிருக்கும் அலுவலகத்தின் மீது கற்களை வீசி வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
முடங்கி உள்ள ஏர்செல் சேவை, சரியாக 4 நாட்கள் ஆகும் என தென் இந்திய தலைமை செயல் அதிகாரி, தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு, கூடிய விரைவில் மாறுவதற்கான போர்ட் எண் கிடைக்கும்,
ஏர்செல் திவால் என்பது பாதி சரி, பாதி தவறு, கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்