மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பீட்டா! விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கவர்னர் உத்தரவு
பீட்டா அமைப்பினரின் புகாரையடுத்து புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானையை காட்டில் விட வேண்டும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வரும் கிரண்பேடி, ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த யானையை கான்கிரீட் தளத்தில் நிறுத்தி இருப்பதால் அதன் காலில் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் அதனை காட்டில் விட வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிகிறது.
மிகவும் புகழ் பெற்ற புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997ம் ஆண்டு 6 வயதான பெண் யானை கொண்டு வரப்பட்டது.
லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட இந்த யானையிடம் பக்தர்கள் தினமும் ஆசிர்வாதம் வாங்கி செல்வர்.
இந்நிலையில் இப்போது திடீரென அதை காட்டில் விட வேண்டும் என்று சொல்வதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.