மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! மக்கள் கூட்டாக கோரிக்கை
மாவீரர் துயிலுமில்லம் வேண்டும் என நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-07-2016 இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
அவா்கள் மேலும் கோரியுள்ளதாவது,
நாம் இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும் எனவும் அதுவும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதாக வெற்றிவிழா கொண்டாடப்படுகின்ற மே மாதம் பதினெட்டாம் திகதியே நாம் அவர்களுக்குஅஞ்சலி செலுத்தும் நாளாகவே பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுகையில்,இறுதி யுத்தத்தில் நடைபெற்ற குற்றச்செயல்களை செய்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் இவ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான பிரதிநிதிகளும் இணைந்து நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன் இவ் விசாரணைகளுக்காக அமைக்கப்படுகின்ற அலுவலகங்கள் எமது கிளிநொச்சி மண்ணிலேயே அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.