இறுதி போரின்போது எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோமென்றும் நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லையென திரைப்பட இயக்குனரும் ஈழ ஆதரவாளருமான அமீர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மத நம்பிக்கையுடையவர்கள் கோயிலுக்குள் நுழைகையில் என்ன பரவசம் இருக்குமோ அதே மனநிலைதான் இம்மண்ணில் காலடி பதிக்கையில் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதிப் பங்களிப்புடன் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாள ர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை திறந்து வைக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன், லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், குறித்த பண்ணையின் பெயர் பலகையினை இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட அதிதிகள் திறந்து வைத்தமையினை தொடர்ந்து, பண்ணையினை லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் குறித்த மாதிரிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2007ஆம் ஆண்டு இம்மண்ணிற்கு வருவதற்கு நான் ஆயத்தமானேன். இதன்போது சீமானிடம் சென்று இலங்கைக்கு சென்று போராட்டங்களை பார்க்க வேண்டுமென கோரினேன். அந்த போராட்டங்களை உலக அரங்கிற்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தேன்.
இதன்போது அவர் என்னிடம் சிறிது நாட்கள் பொறுமையுடன் இருக்குமாறும் நாம் அங்கு சென்று ஈழப் புலிகளின் திரைப்படத்தை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நான் மிகவும் ஆவலாக இருந்தேன். எனினும் எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம் என்றே நான் நினைக்கின்றேன். நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.