பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம்: கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மா.இளஞ்செழியன்
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குற்றவாளிக்கு 3 குற்றச்சாட்டுகளுக்கு தலா 3 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேலும், ஒரு மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு நட்ட ஈடு வழங்க தவறும் பட்சத்தில், 18 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு 15 வயதான சிறுமியை மூன்று முறைக்கு மேலாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமைக்காக குற்றவாளிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.