நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் இன்று (28.1.2018) அதிகாலை முதலாக புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 500 பேர் ஈடுபட்டு உள்ளனர். இந்தக் குழுவினர் புலிகளின் கால்தடத்தை பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு இன்று முதல் பிப்ரவரி 3 -ந்தேதி வரை 7 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாட்டின் முதல் புலிகள் காப்பகமாகவும் இந்திய அளவில் 17-வது சரணலாயமாகவும், அறிவிக்கப்பட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அடர்ந்த மலைப் பகுதியான இந்த வனச்சரகத்தில் 50 பீட்டுகள் உள்ளன. இந்தப் பகுதியில் புலி, யானை, மிளா, காட்டு எருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட அரியவகை விலங்குகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் ராஜநாகம் உள்ளிட்டவையும் உள்ளன. களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் இன்று காலை 6 மணி முதல் புலிகள் மற்றும் இதர விலங்குகள் குறித்துக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கல்லூரி மாணவர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 500 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 10 பேர் கொண்ட 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விலங்குகளை எப்படி கணக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பாபாநசத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால் அனைவரும் சிறப்பான வகையில் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். முதல் நாளிலேயே சில குழுக்கள் புலிகளின் கால்தடத்தை கண்டு பதிவிட்டு உள்ளனர்.
ஒவ்வொரு குழுவினரும் வனப்பகுதிக்குள் நேரில் காணும் விலங்குகள், விலங்குகளின் எச்சங்கள், கால்தடங்கள், நகக்கீறல்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் விலங்குகளை கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு விலங்குகள் குறித்த தகவல்களை பதிவிட புதிய எம்-ஸ்ட்ரைப்ஸ் எனும் மொபைல் செயலி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் வனப்பகுதிக்குள் பார்க்கும் விலங்குகள், தடயங்கள், எச்சங்கள், உள்ளிட்ட விபரங்களை படங்களாவும், புள்ளி விபரங்களாகவும் உடனடியாகப் பதிவிடமுடியும்.
இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய செயலியுடன் ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு குறித்து பேசிய களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், ’’பிப்ரவரி 3-ம் தேதிவரை வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடக்கும் இந்தக் கணக்கெடுப்புக்குப் பின்னர், வனப்பகுதிக்குள் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி வரை கணகெடுப்பு நடத்தப்படும்’’ என்றார்.