பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ விடயத்தில் இலங்கை பொறுப்பற்ற தன்மையுடன் செயற்படுகின்றதென பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் விசனம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் இவ்விடயம் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பிரித்தானியாவின் Eltham மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Clive Eford இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், தமது பகுதியில் இவ்வாறு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் அவர் உரிய முறையில் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டிருப்பார். பிரிகேடியர் பிரியங்கவும் இவ்வாறு விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த மார்க் ஃபீல்ட் இவ்விடயத்தை பிரித்தானியா மிகவும் தீவிரமாக கையாள்வதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, அவரை நாட்டிற்கு திருப்பியழைப்பதாக பிரித்தானிய அரசாங்கத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 4ஆம் திகதி கொண்டாடப்பட்ட 70ஆவது சுதந்திரத் தினத்தன்று, அதனை எதிர்த்து பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். லண்டனிலுள்ள இலங்கை தூதுரகத்திற்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்தில் கையை வைத்து அச்சுறுத்தும் வகையில் சைகை காட்டியுள்ளமை, அங்குள்ளவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதோடு, அவரை நாட்டிற்கு திருப்பியழைத்து விசாரணை நடத்துவது அவசியமென வலியுறுத்தப்பட்டு வருகின்றது.