பிரபாகரனை விட மோசமானவர் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமானவர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனது ஆரம்பம் மஹிந்த ராஜபக்சவினால் உருவாகவில்லை. 35 ஆண்டுகள் நான் அவரின் ஆசீர்வாத்துடன் இராணுவத்தில் செயற்படவில்லை.
ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி நான் அங்கு சேவையாற்றினேன். அவர் தவறிழைக்கும் போது அவருக்கு எதிராக பேச எனக்கு முதுகெலும்பு இருந்தது. பிரபாரகன் என்பவர் பயங்கரவாத தலைவர்.
அவருடைய அரசியல் கொள்கையின்படி நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்தார். எனினும் அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தின் குடும்பத்தை தாக்கும் வகையில் ஒருபோதும் செயற்படவில்லை.
எனினும் நான் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிட்டமையினால் மஹிந்த ராஜபக்ச தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையில் அடைத்தார்.
அத்துடன், எனது பிள்ளைகளையும் பழி வாங்கினார். எனவே அவ்வாறு செயற்பட்டவர் பிரபாகரனைவிட மோசமானவர் என்பதனை உறுதியாக கூறுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.