பான் கீ மூன் ஏமாற்றியதால் அவரின் பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்ட மனு! ஏமாற்றத்தில் மக்கள்
ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது.
பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்புக்கள், அரசியல் தீர்வை வலியுறுத்தி செயற்படும் அமைப்புக்களும் மகஜர்களை சமர்பித்திருந்தனர்.
மயிலிட்டியில், பலாலியில், முள்ளிவாய்க்கால் கிழக்கில், கேப்பாபிலவில், சம்பூரில் உடன் மீளக் குடியேற்ற வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்படல் வேண்டும். காணாமல் போனோருக்கு உடன் பதில் வேண்டும்.
தமிழ்த் தேசத்தின் கட்டமைப்புசார் இன அழிப்பை தடுக்க தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வு வேண்டும்.
இராணுவம் வெளியேற வேண்டும். இன அழிப்பு போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பக்கச்சர்பற்ற விசாரணை வேண்டும். போன்ற கோரிக்கைகள் அம் மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளன.