பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம்
விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.
ஒன்று திரண்ட பொதுமக்கள் இறந்த சொந்தங்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் கதறி அழுது தமது சோகத்தை பிரதிபளித்தமை பார்ப்பவர்களில் நெஞ்சை கசக்கிப் பிழிய வைத்துள்ளது.
புலிகளின் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், மாவீரர் நாளான கார்த்திகை 27 விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்னமோ அச்சுருத்தல் மிக்க நிகழ்வாகவே எதிர்நோக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவிதமான அச்சுருத்தல்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி பல்லாயிரம் கணக்கில் பொதுமக்கள் கிளிநொச்சியில் ஒன்று திரண்டு மாவீரர் தினத்தை அனுஷ்டித்தது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.
பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது.
அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள் இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தது.
அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.
இன்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர்.
அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும் மாவீரர் வணக்கப் பாடல் ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான “எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள்….. ”எனும் வரிகள் ஒலிக்கும் போது கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன் உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது.
கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த இடத்தில் நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை.
எனது பிள்ளையை அவனது புதைகுழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது.ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.