பகிரங்க வாக்கெடுப்பே கூட்டமைப்பு திட்டவட்டம்!
தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை எதிர்க்கும். எந்தவொரு விடயமும் மக்களுக்குத் தெரிந்து – பகிரங்கமாக இடம் பெறவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுப் பகல் நடைபெற்றது. அதில் இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இரகசிய வாக்கெடுப்புக் கோருவதை எதிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளது.
“யாருடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். நாங்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு இணங்கமாட்டோம். ஏனையோரும் இரகசிய வாக்கெடுப்புக் கோரக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
மக்களின் வாக்குகளால் வந்த முதலாவது கூட்டத்திலேயே, மக்களுக்குத் தெரியாமல் ஒழித்து பேரம்பேசி வாங்கி விற்று அரசியல் நடத்துவது மிக மிகக் கேவலமான விடயம். யார் யாருடன் கூட்டுச் சேர்கின்றார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இரகசிய வாக்கெடுப்பை நாங்கள் கோரவும் மாட்டோம். இரகசிய வாக்கெடுப்புக் கோரினால் நாங்கள் அதனை எதிர்ப்போம்” -என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.