நிலவில் கால் பதித்த கடைசி விண்வெளி வீரர் காலமானார்!
அமெரிக்க விண்வெளி வீரரும் நிலவில் கடைசியாக கால் பதித்தவருமான யூஜின் செர்னன் முதுமை காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய அப்பல்லோ 17 விண்கலத்தில் முதன்மை அதிகாரியாக கடந்த 1972 ஆம் ஆண்டு நிலவுக்கு பயணம் மேற்கொண்டார் யூஜின் செர்னன்.
இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி யூஜின் நிலவில் கால் பதித்தார். மட்டுமின்றி தமது ஒரே குழந்தையின் பெயரின் முதல் எழுத்தை நிலவில் பதித்து விட்டு வந்தவர் இவர் என கூறப்படுகிறது.
82 வயதான யூஜின் கடந்த சில மாதங்களாக முதுமையால் ஏற்பட்ட நோய் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
The family of Apollo astronaut Capt. Eugene Cernan, the last man to walk on the moon, addresses his passing: http://go.nasa.gov/2iF0FHW
நிலவில் கால் பதித்த அந்த அரிய தருணம் குறித்த கடந்த 2007 ஆம் ஆண்டு சிலாகித்து பேசிய யூஜின், நிலவில் கால் பதிக்க வேண்டும் என்ற தமது தீராத ஆவல் முதல் இரண்டு முறை மேற்கொண்ட பயணங்களில் நிறைவடையவில்லை எனவும், மூன்றாவது முறையாக மேற்கொண்ட பயணத்தின்போது தான் நிறைவேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலவில் கால் பதித்த பின்னர் திரும்பி வர மனசு வரவில்லை எனவும் சிறிது நேரம் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று எண்ணியதாகவும் அவர் கண்கள் மின்ன தெரிவித்துள்ளார்.
யூஜின் செர்னன் 1934 ஆம் ஆண்டு சிக்காகோ நகரில் பிறந்தார். இண்டியானாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றம் யூஜின், 1963 ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு வகுப்பு ஒன்றிற்காக தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் நிலவு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் பொருட்டு பயணம் மேற்கொண்ட யூஜின், தமது 3-வது பயணத்தில் தனது நீண்ட கால ஆவலை பூர்த்தி செய்தார்.
நிலவில் இதுவரை கால் பதித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ள 11 பேரில் யூஜினும் ஒருவர், மட்டுமின்றி கடைசியாக கால் பதித்த நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.